இலங்கை: இலங்கையில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் மே 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்சே தப்பி ஓட்டம் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியை சுற்றி, மக்கள் முகாம் அமைத்து தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பல தரப்பிலும் நெருக்கடிகள் முற்றியதால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதித்தார். பதவி இழந்த மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன. இதனால் உயிருக்கு பயந்து அவர்கள் பதுங்கியுள்ள திருகோணமலை கடற்படை தளத்தை பொதுமக்கள் சுற்றிவளைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறை மூண்டுள்ளது. ராஜபக்சே ஆதரவு அரசியல் தலைவர்களின் வீட்டை மக்கள் தீயிட்டு கொளுத்தினர். ஹம்பந்த்தோட்டாவில் ராஜபக்சேவின் பூர்வீக வீட்டையும் மக்கள் எரித்தனர். மேலும், மேடமுலானாவில் உள்ள மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபாய ராஜபக்சே வீட்டையும் மக்கள் சூறையாடியதோடு தீ வைத்து எரித்தனர். குருணேகலா பகுதியில் உள்ள மஹிந்தா வீட்டை கொளுத்தினர்.
இலங்கையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், வன்முறையை கைவிடுமாறும் அதிபர் கோத்தபாய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ட்வீட் செய்துள்ளார்.