நடிகர் அஜித்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வரும் நிலையில், அதனை சென்னையில் நடத்த வேண்டும் என ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு இதுவரையில் இருந்து வந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து தமிழ் சினிமா படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர் உறுப்பினர்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து பணிகளை மேற்கொள்வோம் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் ஃபெப்சிக்கும் இடையே இருந்து வந்த உறவு கேள்விக்குறியாகியிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி, ”நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளதால் சென்னையில் அன்றைய தினம் படப்பிடிப்பும் நடைபெறாது.
5 வருடங்களாக எந்த பிரச்னை வந்தாலும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். படத்திற்கு தேவையில்லாத காட்சிகளை வேறு மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தி வருவது தவறு. வருமானம் இங்கு வருகிறது, செலவு அங்கு பொய் செய்கின்றனர். இதனை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நடிகர் அஜித் குமாரிடம் நேரிடையாக கோரிக்கை வைக்கிறோம், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால், இங்கு இருக்கக்கூடிய தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த கோரிக்கையை நடிகர் அஜித் குமார் ஏற்றுகொள்ள வேண்டும்.
சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் அனைவரும் இந்த கோரிக்கையை ஏற்றுகொள்ள வேண்டும்” என்றார்.