“ஹார்ட் அட்டாக் என்பது என்ன என முதலில் புரிந்துகொள்ளுங்கள். இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு தடைப்படுவதை ஹார்ட் அட்டாக் என்கிறோம். ஹார்ட் அட்டாக் என்பது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பது, அதாவது அடைப்பானது 60 சதவிகிதம், 70 சதவிகிதம் என அதிகரித்து பிறகுதான் 100 சதவிகிதத்தைத் தொடும் என்று பலரும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 60 சதவிகிதமாக இருக்கும் ரத்தக்குழாய் அடைப்பானது, எரிமலை வெடிப்பதுபோல திடீரென தீவிரமாகி, ரத்தக்கட்டிகள் உருவாகி, 100 சதவிகித அடைப்பாக மாறி, ஹார்ட் அட்டாக் வரலாம்.
இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. அதில் எந்த ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படுகிறதோ, இதயத்தின் அந்தப் பகுதியில் மட்டும் ரத்த ஓட்டம் குறையும். ரத்தக்குழாய் அடைப்பு எப்போது தீவிரமாகும் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. ஆனால், இந்த நிகழ்வைத் தவிர்க்க நாம் சில விஷயங்களைச் செய்ய முடியும்.
சரியான உணவுப் பழக்கம், நல்ல தூக்கம், புகைப்பழக்கம் இல்லாதது, உடற்பயிற்சிகள் செய்வது, ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவை இருந்தால் சரியான சிகிச்சைகளைப் பின்பற்றுவது, மன அழுத்தம் இல்லாமலிருப்பது போன்ற அடிப்படையான விஷயங்களின் மூலம் ஹார்ட் அட்டாக் அபாயத்தைக் குறைக்க முடியும்.
திடீரென யாருக்காவது நெஞ்சுவலி வந்தால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், உலக அளவில் உயிரிழப்புகளுக்கான நம்பர் ஒன் காரணம் ஹார்ட் அட்டாக். எனவே, தாமதமற்ற சிகிச்சை மிக மிக அவசியம்.”