ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அங்குள்ள கார் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் கல்லூரியில் படித்தபோதே ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தனது பெயரை பல்லவி என்று மாற்றியுள்ளார். மணமகன் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டில் இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு சரோர் நகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த நாகராஜை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
நாகராஜ் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் அவரைக் கொலை செய்துவிட்டனர் என்று நாகராஜின் உறவினர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நாகராஜின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜ் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு மதத்தைச் சார்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் அவரைக் கொலை செய்தனரா என போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.